Sunday, August 27, 2006

,

Monday, October 17, 2005

எனக்கு பிடித்த புத்தகங்கள் - I

J.D. Salinger's Catcher in the Rye

என்னை எது கொல்லும் என்றால் ஒரு புத்தகம் - அதனைப் படித்து முடித்தவுடன் அதன் ஆசிரியர் உன் நெருங்கிய நண்பன் போல் தோன்றும்; அவரிடம் எப்பொழுது வேண்டுமானாலும் ஃபோன் செய்து பேசலாம் என்று தோன்றும். ஆனால் அப்படி அடிக்கடி அமைவதில்லை.

("What really knocks me out is a book that, when you're all done reading it, you wish the author that wrote it was a terrific friend of yours and you could call him up on the phone whenever you felt like it. That doesn't happen much, though." )


Catcher In the Rye- யின் நாயகன் ஹோல்டன் கால்ஃபீல்டின் கருத்து இது. ஒரு வகையில் என் கருத்தும் கூட. இந்த புத்தகத்தைப் நான் முதன் முதலில் படித்த போது எனக்கு தோன்றிய பல வினோதமான சிந்தனைகளில் இதுவும் ஒன்று; அப்பொழுது எனக்கு வயது 18.

CITR ஒரு விசித்திரமான நாவல். 1945-46-இல் அமெரிக்காவில் வெளிவந்த இந்த நாவல் இன்றும் பதின்ம வயதினர் தளப்பங்களின் அடையாளமாக இருந்து வருகிறது. நாவல் முழுக்க ஒரு மெல்லிய சோகத்துடன் ஒரு விரக்தியான நகைச்சுவையின் இழை ஓடும். பல நேரங்களில் சிரிக்க வைத்து, கால்ஃபீல்டுடன் ஒரு பந்தத்தை உருவாக்கி, அவன் மேல் ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தி, அவன் செய்கைகள் யாவும் நியாமோ என சிந்திக்க வைத்து, நம்முடன் அவனை ஒப்பிடும் நிலைக்குத் தள்ளி, இந்த உலகத்தை விரக்தியுடனும், சந்தேகத்துடனும் பார்க்க வைத்து ஒரு விபரீத மன நிலையில் பல நாட்களுக்கு ஆழ்த்தி விடும். It is one of those dark novels, but a terrific one that!

முதன்முதலில் ஒரு தொடராக வெளிவந்த CITR, ஒழுக்கக் கோட்பாடுகளை மீறுவதாக (இன்றைய நிலையில் இவை திடுக்கிடும் வரம்பு மீறல்கள் என்று சொல்ல இயலாது.) பல குற்றச் சாட்டுகளுக்கு உள்ளாகி, பெரும் சர்ச்சைகளில் இன்றுவரை சிக்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இதன் கதை அமைப்பும், அதன் மொழி நடையும். இக்கதை முழுவதும் ஒரு முதல் நபர் விவரணை - கால்ஃபீல்ட் அவன் பார்வையில் உலகத்தை விவரிக்கிறான். கால்ஃபீல்ட் ஒரு சராசரி 16 வயது அமெரிக்கன். அவன் மொழி கொச்சையானது, கெட்ட வார்த்தைகள் நிறைந்தது, ஆனால் யதார்த்தமானது. சர்ச்சைகளுக்கு காரணமான இந்த மொழி நடையே இக்கதைக்கு ஒரு நம்பகத் தன்மையைத் தருவதுடன், கால்ஃபீல்டிற்கு ஒரு முழு உருவத்தைத் தருகின்றது.

கதையென்று பார்த்தால் மிக எளிமையான அமைப்பு. கதை என்னவென்று புத்தகம் படிக்கும் முன்னமே தெரிந்தாலும், வாசக அனுபவம் எந்த வகையிலும் பாதிக்கப்படாத முறையில் இருக்கும் கதை - கதை தெரிந்து படித்தாலும் எதிர்பாராமல் சிரிப்போம், புன்னகைப்போம், வருத்தப் படுவோம், கோபப்படுவோம். இருந்தாலும் ஒரு "spoiler warning" இங்கு இடுகிறேன் - கதைப் பற்றிய சில குறிப்புகள் இப்பத்தியில் உள்ளது. கால்ஃபீல்ட் பல தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில் கடைசியாக அவன் பள்ளியில் இருந்து நீக்கப் படுகிறான். அங்கு துவங்குகிறது கதை. கால்ஃபீல்ட் அதற்கு முன்னமே பல முறை பல பள்ளிகளில் இருந்து நீக்கப் பட்டிருந்தான். அந்த நிலையில் அவன் பெற்றோரை சந்திக்கும் தைரியம் இல்லாமல், பள்ளியில் அவன் கடைசி நாளுக்கு மூன்று நாட்கள் முன்னரே பள்ளியிலிருந்து வெளியேறி சில நாட்கள் நியூ யார்க்கில் கழிக்க முடிவு செய்கிறான். அங்கு அவன் அனுபவங்களையும், அவன் சந்திக்கும் மனிதர்களையும், அவர்களைப் பற்றிய கருத்துக்களையும் கால்ஃபீல்ட் பகிர்ந்து கொள்கிறான்.

அவன் அவனது அனுபவங்களை விவரிக்க, மெதுவாக "கால்ஃபீல்ட்" என்ற ஆளுமை வாசகர் மனதில் உரு பெறுகிறது. அவன் உணர்வுகள் புரியத் துவங்குகிறது. அவனது குழப்பமான மனநிலை நமக்குத் தெளிவாகிறது. அந்த மூன்று நாட்களின் அவன் அனுபவங்கள் அவனை பெரும் மன உலைச்சலுக்கு ஆளாக்கி அவன் மேல் ஒரு பரிதாபம் கொள்ளச் செய்கிறது. அவன் அனைவராலும் கைவிடப் பட்ட நிலையில் இருப்பது போல் உணர்கிறான். அவனுக்குள் மனிதர்களின் போலித் தனம் ஒரு வெறுப்பை ஏற்படுத்துகிறது, முக்கியமாக குழந்தைப் பருவத்தைத் தாண்டியவர்கள். குழந்தைகள் வளர வளர அவர்களது வெகுளித் தன்மைகளை இழந்து இந்த போலிச் சமூகத்தில் இழுத்துக் கொள்ளப் படுகிறார்கள் என்ற எண்ணம் அவன் மனதை வாட்டுகிறது. அவன் உலகையும், அவன் சந்திக்கும் மனிதர்களையும் விவரிக்க அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை "phony" (போலியான). அந்த போலியான உலகத்தில் அவன் முழுமையாக நம்பும் ஒரே நபர் அவன் தங்கை ஃபிபீ(Phoebe). கால்ஃபீல்ட் என்ற கதாப்பாத்திரத்தின் அழகு அதன் முரண்பாடுகள் தான் - உதாரணத்திற்கு அவன் மொழியில் அதிக கெட்ட வார்த்தை இருக்கும்; ஆனால் அவன் தங்கையின் பள்ளியின் சுவரில் எழுதப் பட்டிருந்த அதே வாசகங்கள் கண்டு கோபப்படுவான். கால்ஃபீல்ட் ஒரு சிக்கலான, குழப்பமான கதாப்பாத்திரம். இருப்பினும் சாலிங்கர் அதை மிக அழகாக கையாண்டிருக்கிறார். சில இடங்களில் இத்தனை சிக்கலான கதாப்பாத்திரத்துடனும் ஒரு வாசகன் தன்னை ஒப்பிட்டு பார்க்கும் நிலைக்குத் தள்ளப் படுவான்!

இந்த நாவலில் பல உருவகங்கள் பயன் படுத்தப் பட்டிருக்கின்றன. தலைப்பே ஒரு முக்கியமான உருவகம் தான். கால்ஃபீல்ட் ஒரு இடத்தில் தான் "Catcher in the Rye" ஆக ஆசைப்படுவதாக கூறுகிறான்.

What I have to do, I have to catch everybody if they start to go over the cliff- I mean if they're running and they don't look where they're going I have to come out from somewhere and catch them. That's all I'd do all day. I'd just be the catcher in the rye and all. I know it's crazy, but that's the only thing I'd really like to be. I know it's crazy.

அதாவது ஒரு மலை உச்சியில் உள்ள வயல் ஒன்றில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, எந்த குழந்தையும் உச்சியில் இருந்து கீழே விழாமல் அவர்களை பிடித்துக் கொள்பவனாக ஆக வேண்டும் என்கிறான். இதில் மலை உச்சியில் இழுந்து விழுவதென்பது ஒரு குழந்தை தன் வெகுளித் தனத்தை இழந்து "போலியான" உலகத்தில் விழுவதை குறிப்பிடுகிறது. அவன் குழந்தைகளை அவற்றில் இருந்து காக்க விரும்புகிறான். அவர்களது மழலைத் தனத்தை பராமரிக்க ஆசைப் படுகிறான். அவன் உலகத்தின் மேல் கொண்ட கண்ணோட்டத்தையும் அவன் மன நிலையையும் முழுமையாக விளக்கும் பகுதி இது தான்.

CITR-யில் எரிச்சலூட்டும் விஷயம் என்னவெனில், நாவலில் உள்ள இருள் மெதுவாக படிப்பவரையும் பற்றிக் கொள்ளும். ஒரு புதிய வாசக அனுபவத்தை தருவதுடன் ஒரு விரக்தியான மனநிலையில் ஆழ்த்தி விடக் கூடும். இந்த நாவலின் வெற்றிக்கும் சரி, இந்நாவல் நிராகரிப்படுவதற்கும் சரி, முக்கிய காரணம் இது தான். என் மேல் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய படைப்புகளில் இதனை மிக முக்கியமானதாகச் சொல்வேன். கால்ஃபீல்ட் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் - It killed me, it really did.

oooOOOooo

CITR-ஐ நான் சமீபத்தில் மறுமுறை படிக்க நேர்ந்தது. இம்முறை ஏற்பட்ட அனுபவம் வேறு விதமாக இருந்தது. கால்ஃபீல்டுக்கும் எனக்கும் ஒரு பெரிய இடைவெளி இருப்பது போல் தோன்றியது. இருப்பினும் பிடித்திருந்தது. இதனை படிக்கும் பொழுது எனக்கு அடிக்கடி தோன்றிய சிந்தனை CITR தமிழில் அமைத்தால் எவ்வாறு இருக்கும் என்று. இதனை அப்படியே மொழிபெயர்ப்பதென்பது சாத்தியமாக தோன்றவில்லை. இது இந்திய சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப் பட வேண்டும், அதே கருவுடன் ஒரு புதிய நாவலை எழுதுவது போல். CITR-ஐப் போல், இல்லை அதை விட சிறப்பாக அதனை அமைக்க முடியும்; ஏனென்றால் ஒரு சராசரி 16 வயது அமெரிக்கனைக் காட்டிலும் ஒரு 16 வயது இந்தியனுக்கு அவன் சமூகம் மீது ஏற்படும் கோபங்களும், வெறுப்புகளும் அதிகமானவை, சுவாரசியமானவை. இங்கு "phoniness" அதிகம்.

எனக்கு பிடித்த சில வரிகளை இங்கு நான் மொழி பெயர்த்திருக்கிறேன்/தமிழில் மாற்றி அமைத்திருக்கிறேன். நாவலில் உள்ள மெல்லிய (விரக்தியான) நகைச்சுவை இழை உங்களுக்குப் புரியும்.

கடவுள் சத்தியமாக நான் ஒரு கிறுக்கன்.
(I swear to God I'm a madman.)

நான் ஒரு அக்மார்க் அண்டப்புளுகன். நான் பத்திரிக்கை வாங்க கடைக்குச் சென்று கொண்டிருக்கும் பொழுது என்னை நிறுத்தி "எங்கே செல்கிறாய்?" என்று கேட்டுப் பாருங்கள், நான் நாடகம் பார்க்கச் சென்று கொண்டிருக்கிறேன் என்பேன். கொடுமை.
("I'm the most terrific liar you ever saw in your life. It's awful. If I'm on my way to the store to buy a magazine, even, and somebody asks me where I'm going, I'm liable to say I'm going to the opera.")

என்னிடம் பேசுவது மிகவும் கடினம். அது எனக்குத் தெரியும்.
(I'm very hard to talk to. I realize that.)


உருப்படாத திரைப்படங்கள். உன்னைக் கெடுத்துவிடும். நிஜமாகத் தான். நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை.
(The goddam movies. They can ruin you. I'm not kidding.)


இருந்தாலும், அணுகுண்டை கண்டு பிடித்தது எனக்கு ஒரு வகையில் சந்தோஷமாகத் தான் இருக்கிறது. இன்னும் ஒரு யுத்தம் நடந்தால், அதன் மேல் ஏறி உட்கார்ந்துக் கொள்ளப் போகிறேன். கண்டிப்பாக அதற்கு முன்வருவேன், கடவுள் சத்தியமாக.
(Anyway, I'm sort of glad they've got the atomic bomb invented. If there's ever another war, I'm going to sit right the hell on top of it. I'll volunteer for it, I swear to God I will.)



எனக்கு நிமோனியா வந்து இறந்தால் ஃபிபீ என்ன நினைப்பால் என்று யோசிக்கத் துவங்கினேன். குழந்தைத் தனமான சிந்தனை, இருந்தாலும் நிறுத்திக் கொள்ள முடியவில்லை. அது போல் ஏதாவது நடந்தால், அவள் வருத்தப் படுவாள். அவளுக்கு என்னை மிகவும் பிடிக்கும். உண்மையாகவே. அந்த சிந்தனையை என் மனதில் இருந்து நீக்க முடியவில்லை;அதனால் என்ன செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். பேசாமல் நான் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள் சென்று அவளை ஒரு முறை பார்த்துவிடப் போகிறேன், ஒரு வேளை நான் இறந்து போய்விட்டால்?
(I started thinking how old Phoebe would feel if I got pneumonia and died. It was a childish way to think, but I couldn't stop myself. She'd feel pretty bad if something like that happened. She likes me a lot. I mean she's quite fond of me. She really is. Anyway, I couldn't get that off my mind, so finally what I figured I'd do, I figured I'd better sneak home and see her, in case I died and all.)


oooOOOooo

CITR பற்றியும் சாலிங்கர் பற்றியும் சில சுவாரஸ்யமான செய்திகள்:
  • சாலிங்கர் எழுதிய ஒரே நாவல் இது.
  • பீட்டில் புகழ் ஜான் லெனனைக் கொன்ற மார்க் சாப்மன் கைதியான பொழுது இந்த புத்தகத்தை வைத்திருந்தான்.
  • சாலிங்கர் ஓனா ஓ நீலைக் (Oona O'Neill) காதலித்தார். ஆனால் அவர் எதிர்பாராத வண்ணம், ஓநீல் தன்னை விட பல வருடங்கள் வயதான சார்லி சாப்லினை மணம் செய்து கொண்டார்.
  • பப்லிஷர்ஸ் வீக்லியின் கணக்கெடுப்பின் படி CITR-இனை அதிகமாகப் படிப்பவர்கள் பெண்களே!
  • ஒவ்வொறு வருடமும் சுமார் CITR 250000 பிரதிகள் விற்கின்றன.
  • இரண்டாம் உலகப் போரில் நார்மண்டியைக் கைப்பற்றிய காலாட் படையில் சாலிங்கர் உறுப்பினராக இருந்தார்.

Thursday, September 22, 2005

பஞ்சு மிட்டாய்

PanjuMittai


அக்டோபர் 23, 2007

நகரம் எங்கும் விரோனின் படங்கள். சுதந்திரத் திடல் ஒரு கருப்புக் கடலாகக் காட்சி அளித்தது. விரோன், எப்பொழுதும் அணிந்த அந்த கருப்பு சட்டையும் திருப்பி அணியப் பட்ட கருப்புத் தொப்பியும் திரும்பும் இடமெங்கும் காணப்பட்டது. திடலின் நடுவில் செர்கன் கம்பீரமாக நின்று கொண்டிருந்தான். அவன் இடது கையை மெதுவாக உயர்த்த, ஆரவாரம் மெதுவாக குறைந்து ஒரு நிசப்தம் நிலவியது. "தோழர்களே! இன்று எழுச்சி நாள்! ஒரு ஒடுக்கப் பட்ட சமூகம் தன் திரைகளைக் கிழித்து எழுச்சியுடன் எழுந்து நிற்க வித்திட்ட நாள். இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்றின் சுவையை இரண்டு வருடங்கள் முன்பே கோபத்துடனும், ஒரு வைராக்கியத்துடனும் உணரச் செய்து விரோன் வீர மரணம் அடைந்த நாள். அவரது எழுத்துக்களை இன்று நினைவு கொள்கிறேன்". அவரது குரல் தடுமாறியது.

பயத்தினை நின்று புதைப்போம்;
அதனுடன் நம்மை மிதித்த வெருளிகளையும்!
.......
உணர்வுகள், உடைமைகள், உயிர்கள் தொலைத்தாயிற்று,
மிச்சமிருப்பது இந்த வேட்கை மட்டும் தான்!
.......


அக்டோபர் 23,2005

மெதுவாக என் கண்கள் இருட்டிற்கு பழகிக் கொண்டிருந்தன. பின்னிருந்து துப்பாக்கி முனையால் என்னையும் லார்ஸிக்கையும் முன் தள்ளிக் கொண்டிருந்த உருவங்கள் ஓரளவிற்கு கண்ணுக்குத் தெரியத் தொடங்கின - ஒருவன் பருமனாக இருந்தான், இன்னொருவனிடம் நினைவு கோர ஒரு சிறப்பு அம்சமும் இல்லை; என்னைப் போல தொப்பியை திருப்பி அணிந்திருந்ததைத் தவிர. கண்டிப்பாக இவை எங்களது வாழ்வின் இறுதித் தருணங்கள் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். ஏற்கனவே இரு முறை மரணத்தின் பிடியில் இருந்து தப்பி இருந்தாலும், இம்முறை அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. லார்ஸிக் உடம்பில் இருந்து அதிகமாக இரத்தம் கசிந்து விட்டது. தள்ளாடி நடந்துக் கொண்டிருந்தான். அவனைக் கொல்ல அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கத் தேவையில்லை. அப்படியே விட்டு விட்டால் போதும், அதிக பட்சம் இரண்டு மணிநேரம் உயிருடன் இருப்பான்.

எப்படிப் பட்ட மாவீரன். நினைத்துப் பார்க்க வருத்தமாக இருந்தது. என்னை அவன் "கேப்" என்று தான் அழைப்பான், கேப்டன் என்பதன் சுருக்கம். நான் அவனை ஒரு முறை உற்றுப் பார்த்தேன். என்னைப் பார்த்து சிரித்தான். "என்ன கேப் , பயமாக இருக்கிறதா?" என்று கண்ணடித்தான். நான் மௌனமாக இருந்தேன்."எனக்கும் தான்" என்றான். நான் அதனை எதிர்பார்க்கவில்லை.

என்னை கண்டிப்பாக கொன்று விடுவார்கள். எப்படி என்பது மட்டும் தான் நிச்சயமில்லை, அவர்கள் என் மேல் கொண்ட வெறுப்புக்கு இணங்க இருக்கும். பின்பு வழக்கம் போல், வெள்ளைச் சவப் பெட்டியில் என் இராணுவ முகாமிற்கு அனுப்பி வைப்பார்கள். தலைவன் என்பதால் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப் படும், வலது கையற்ற என் சவம்; எல்லா வசீகரமும் இழந்து, இரத்தக் கறையோடும், காயங்களோடும் என் முதல் தோல்வியின் சின்னமாக என் சவம்.

எனது வலது தோள் பட்டையை தடவிப் பார்த்துக் கொண்டேன். தசைகள் தொங்கிக் கொண்டிருந்தன. நுனிகளில் இரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. இல்லாத கட்டை விரல் வலிப்பது போன்ற உணர்வு. "Bulls' Eye" ஷெல் துளைத்து வயலோரம் எங்கோ கிடக்கிறது என் கை. குறி வைத்தவன் திறமை வாய்ந்தவனாக இருந்திருக்க வேண்டும். என் சிந்தனை ஓட்டத்தை தடை செய்வது போல் எங்களை இடது புறம் திரும்பச் சொல்லித் தள்ளினார்கள். திரும்பியவுடன் அவ்விடம், போர்க் கைதிகளுக்கான பிரத்யேகச் சிறை என்று புரிந்தது. வரிசையாக வலது புறம் அறைகள். ஒவ்வொறு அறையிலும் ஒரு கைதி, பரிச்சயமான முகம். அவ்வரிசையின் கடைசி அறை காலியாக இருந்தது. அங்கே என்னை அடைத்தார்கள். "இந்த அரை பிணத்தை என்ன செய்வது?" என்று பருமனானவன் லார்ஸிக்கைப் கைக்காட்டிக் கேட்டான். "அவனை முதல் அறையில் அந்த கவிஞனுடன் சேர்த்து அடைத்து வை. அவனது கவிதைகள் கேட்டே மீதி உயிரும் போய்விடும்" என்று சொல்லி சிரித்துக் கொண்டே அவனை இழுத்து சென்றனர். இவர்கள் எங்களை வைத்து பல்லாங்குழி ஆடுவது போல் எனக்குத் தோன்றியது - நாங்கள் காய்கள், அறைகள் குழிகள். இந்த சிந்தனையை இன்னும் ஓடவிட்டேன்.

கணிதத்தில் பயின்ற "Pigeon Hole Theorem" நினைவுக்கு வந்தது. எத்தனை எளிதான தேற்றம்! ச்ச.. இது என்ன இறக்கும் பொழுது சம்பந்தமற்ற சிந்தனைகள். நான் சுயநினைவிழந்து விட்டேனா? என்னை பயம் ஆட்கொண்டு விட்டதா? மரணம் அனைவரையும் இந்நிலைக்கு கொண்டு வந்துவிடுகிறதோ? லார்ஸிக்கும் பிடிபடும் பொழுது சம்பந்தமில்லாமல் - "கேப்! எத்தனை அழகிய மண்வாசனை! What beautiful sunset!" என்றான்.

கண்ணை மூடிக் கொண்டு Joseph Blanco White எழுதிய Mysterious Night கவிதை வரிகளை என் மனதில் உலவ விட்டேன்.
Why do we then shun Death with anxious strife?
If Light can thus deceive, wherefore not Life?

இருள் மெதுவோக என்னை மறுபடி கவ்விக் கொண்டது.

என் இடது கைவிரல்கள் மெதுவாக என்னை அறியாமலேயே, என்னையே உணர்ந்து கொண்டிருந்தது. என் கண்ணருகே இருந்த தழும்பின் மேடு பள்ளங்களை ஆராய்ந்து கொண்டிருந்த பொழுது அதனை உணர்ந்தேன். அந்த தழும்பிற்கு பதினெட்டு வயதிருக்கும். எனது பத்தாவது வயது; பள்ளியிலிருந்து வீட்டிற்கு சைக்கிளில் வந்து கொண்டிருந்தேன். அந்த ஒரு மைல் தூர நேர் பாதையை அடைந்த பொழுது அதிசயமாக எவரும் சாலையில் இல்லை. அன்றே செய்து விட வேண்டும் என்று, மெதுவாக இரு கைகளையும் பிடியில் இருந்து எடுத்தேன். சைக்கில் ஆடத் துவங்கியது. சட்டென மறுபடி கைப்பிடியைப் பிடித்து நிதானப் படுத்திக் கொண்டேன். சில நொடிகள் கழித்து, மறுபடி கைப்பிடியை விட்டேன். சைக்கிள் நிலை குலைந்து ஆடத் துவங்கியது. என்னை பயம் பற்றிக் கொண்டது. ப்ரேக்கை அழுத்தி நிறுத்தினேன். எனக்கு உடல் முழுக்க வியர்த்து விட்டது. சிறிது நேரம் என்னை நிதானப் படுத்திக் கொண்டேன். ஆனால் செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் என் மனதைப் பற்றிக் கொண்டது. சைக்கிளை செலுத்தினேன், இம்முறை சற்று வேகமாக. மெதுவாக கைகளைக் கைப்பிடியில் இருந்து விலக்கினேன். அப்பொழுது மெல்லிய காற்று வீசத் துவங்கியது. அதன் மெல்லிய ஸ்பரிசத்தில் லயித்தேன். ஐந்து விநாடிகள் மெய் மறந்தேன். கைகள் காற்றில் இருந்ததையும் மறந்தேன். அதை உணர்ந்த நொடி என் ஆனந்தத்திற்கு அளவில்லை. கைகளை நன்றாக பரப்பி அந்த வெற்றியைக் கொண்டாடினேன்.

15...20..25 நொடிகள். சாலையின் முடிவு வந்து விட்டது. இன்னும் கைகள் கைப்பிடியில் இல்லை. தீடீரென ஒரு ஆட்டிக்குட்டி சாலையைக் கடந்து ஓடியது. நான் அவசரமாக ப்ரேக்கை அழுத்த நான் நிலையிழந்து விழுந்தேன். கைப்பிடி ஓரம் என் கண்ணருகே குத்திவிட்டது. வெற்றியின் களிப்பு வலியை மறக்கச் செய்தது.அந்த தழும்புடன் அந்த நாளின் நினைவுகள் என்னுடனே தங்கி விட்டது. அந்த நாள் எனக்காவே புலர்ந்தது போல் இருந்தது - யாரும் இல்லாத சாலை, பயத்தை மறக்க வீசிய அந்தக் காற்று!

"பயத்தை நின்று புதைத்தேன்!"

என் விரல் என் உதடுகள் மேல் இருந்த மெல்லிய கோட்டில் பயனம் செய்து கொண்டிருந்தது. என் வசீகரத்தை எனக்கு உணர்த்திய கோடு. ஏழு வருடங்கள் முன்பு என் முகத்தில் வரையப் பட்ட கோடு. அன்று மூவாயிரம் மாணவர்கள் எனக்கு வாக்களித்து தலைவனாக்கியிருந்தனர். அத்தனை தோள்களும் என்னை சுமக்க ஆசைக் கொண்டிருந்தன. இதற்கிடையிலும் அன்று என்னை வெறுத்தவர்களும் இருக்கத் தான் செய்தார்கள். என்னைக் கொண்டாடிய எவனோ ஒருவன் தோளில் உட்கார்ந்திருந்த பொழுது, வேகமாக ஒரு கல் வந்து என் உதட்டின் மேல் உள்ள தோலைக் கிழித்தது. இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. வெற்றி ஒரு போதை. வலி போன்ற உணர்வுகளை மறக்கச் செய்யும். I was a mad man, drugged by the limelight. Yes, drugged. வெறி பிடித்தவன் போல் அவனை துரத்தினேன். என் பின் மூவாயிரம் மாணவர்கள், இல்லை என் விரல் அசைவிற்காக காத்திருந்த தொண்டர்கள். சிறிய கலவரம், கல் எறிந்தவன் கண்ணீர் வழிய கை கூப்பி மன்னிப்புக் கேட்டான். கேன்டீன் நாசமாக்கப் பட்டது, சில வகுப்புகளின் இருக்கைகள் சேதம் அடைந்தன. எல்லாம் எனக்காக, மாணவர் தலைவன் விரோனுக்காக.
"அதனுடன் என்னை மிதித்த வெருளிகளையும்!"

இன்று யோசித்துப் பார்த்தால் எல்லாம் அர்த்தமற்றதாக இருந்தது. அன்று துவங்கி இன்று வரை ஒரு வெறி பிடித்தவனாகவே வாழ்ந்திருக்கிறேன். அந்த ஒரு நாள் இல்லாமல் இருந்திருந்தால்? அர்த்தமற்ற வெறி! சில நொடிகள் என் மனம் நிசப்தமாக இருந்த்து. ஆனால் பாரமாக இருந்தது.

முட்டாள்! அன்று இல்லை என்றால் வேறொரு நாள். நீ இதற்காகப் பிறந்தவன். You were destined to do these. உன் வெறி ஒரு கொள்கைக்காக. நியாமானதே. எனக்கு மண்டை வெடிப்பது போல் இருந்தது. கொள்கை, விதி - எல்லாம் சப்பைக் கட்டுகள்! எல்லாமே அர்த்தமற்றவை. நான் எனக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டிருந்தேன். என் உயிர் அந்த நொடி முடிந்து விட வேண்டும். "என்னை சீக்கிரம் கொல்லுங்கள்!"

மறுபடி இருள். நான் என்னை சாந்தப் படுத்திக் கொள்ள முயற்சித்தேன். நிதானமாக யோசித்தேன். என் இருபத்தெட்டு வருட வாழ்க்கையின் வேர்களை இந்த நிமிடங்களின் சிந்தனைகள் அறுத்தெரிந்து கொண்டிருந்தன. ஏன் இந்த சிந்தனைகள்? என்னை வேகமாக அணுகும் மரணத்தினாலா? ஆம், என் இயலாமையை ஒப்புக்கொள்ளும் விதமாக இந்த சிந்தனைகள், உளறல்கள். ஆம் மரண பயத்தின் வெளிப்பாடுகள். அவ்வளவே!

சிறிது நேரமே என் மனம் அமைதியாக இருந்தது. மறுமுறை எனக்குள் அந்த விவாதம் துவங்கிவிட்டது.

மரண பயம்? பொய், எல்லாம் பொய். இதனை இன்று தான் யோசிக்கிறாயா? இதனை இதற்கு முன் எத்தனை முறை சிந்தித்திருக்கிறாய் - தூக்கம் இல்லாமல் நட்சத்திரங்களைப் எண்ணிக் கொண்டு, தன்னந்தனியாக ஆற்றங்கரையில் கற்கள் எறிந்து கொண்டு, அந்த சிறுவர்களுடன் க்ரிக்கெட் விளையாடிக் கொண்டு, எத்தனை முறை! அப்பொழுதெல்லாம் எங்கிருந்தது மரண பயம்?

வாயை மூடு!

அந்த நாள் அந்த சாலை காலியாக இல்லாமல் இருந்திருந்தால்? அந்த காற்று வீசாமல் இருந்திருந்தால்?

முந்தானை பிடித்துக் கொண்டு அம்மாவின் பின் பயந்து ஒளியும் மூக்கொழுகும் சிறுவனாக இருந்திருப்பேன். அப்படி இருக்க நான் விரும்பவில்லை.

இன்றைய உனக்கும் அந்த மூக்கொழுகும் சிறுவனுக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. நீ யார்? ஒரு சுவரொட்டி! ஒரு post card! உன் படம் உள்ள அஞ்சல் அட்டைகளை கரப்பான்பூச்சிகள் வாழும் பெட்டிகளில் சேர்த்து வைப்பார்கள்! அவ்வளவே!

Oh! Stop it! Give me my Gun!

பல வருடங்கள் பின் கண்களிலிருந்து கண்ணீர் கசிந்தது! உலகமே என்னை கைவிட்டது போல் இருந்தது. "Post Card"! என்னை ரேயோன் வர்ணித்த அதே வார்த்தைகள்! ரேயோன் - எத்தனை அழகான பெண். என் வாழ்க்கையின் சிறந்த கணங்கள் என்றால், அவளுடன் இருந்த முதல் ஐந்து நாட்களை தான் சொல்வேன். ஆறாவது நாளை மறக்க விரும்பினேன். மறக்க விரும்பினாலும் அந்த நாள் நினைவுகள் எத்தனை முறை என்னை பாடாய் பட்டித்தின.

"விரோன்...நேற்று உன் டைரியைப் படித்தேன்."

"என்ன! என் டைரியை என்னைக் கேட்காமல் படித்தாயா? ரே, இது அநாகரிகம் இல்லை? உன்னிடம் இதனை எதிர்பார்க்கவில்லை"

"நடிக்காதே. நான் அதனை படிக்க வேண்டும் என்று தான் நேற்றிரவு என் அறையில் விட்டுச் சென்றாய். உண்மை தானே?"

நான் மௌனமாக இருந்தேன். உண்மைதான்.

"So, நீ ஒரு புரட்சிக்காரன்?"

"ஆம். இந்த நாட்டினை ஒரு புதிய பாதையில் நடத்திச் செல்லப் பிறந்தவன்", என்று சொல்லிக் கொண்டே பாக்கெட்டில் இருந்து பிஸ்டலை எடுத்து சுற்றினேன்.

"இதைத் தான் இத்தனை நேரம் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்தாயா?"

"ஆமாம்"

"ம்ம்ம்.."

"எதற்கிந்த ம்ம்? உனக்கு உடன்பாடில்லை என்று தோன்றுகிறது"

"நான் அப்படி சொல்லவில்லை"

"பின் எப்படி?" கொஞ்சம் கோபமாகவே கேட்டேன்.

"எப்படியும் இல்லை விரோன்! சரி கேள். நீ உன் வாழ்க்கையை பயந்து வாழுகிறாய்"

"பயத்துடன்? நானா?", சிரித்தேன்.

"சரி, பயம் என்பது அதிக பட்ச வார்த்தை. ஆனாலும் பயமும் இருக்கிறது. இப்பொழுதே பார், உன் வலது கையில் பஞ்சு மிட்டாய் அப்படியே இருக்கிறது. என் கையில் இருப்பதை பார், குச்சி பட்டுமே; என்னால் என் பஞ்சு மிட்டாயை முழுவதுமாக ரசிக்க முடிந்தது. நீ பஞ்சு மிட்டாயை விட இடது கையில் உள்ள துப்பாக்கியை இறுகப் பிடித்திருக்கிறாய்."

"புரட்சியைவிட உனக்கு இந்த அற்ப பஞ்சு மிட்டாய் பெரிதாகத் தோன்றுகிறது?"

"விரோன் நான் சொல்வது உனக்கு புரியவில்லை. உனக்கு நான் சொல்வது பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் இதனை நீ கேட்டே ஆக வேண்டும். நீ உன் வாழ்க்கையை அவசரமாக வாழுகிறாய். அனைத்திலும் அவசரம். இன்று, நேற்றிரவு, எப்பொழுதும். நீ ஒரு பெரிய சுமையுடன் அலைகிறாய். "

"சிலவற்றைப் பெற சிலவற்றை இழக்கத் தான் நேரிடுகிறது. வெற்றி பெற்ற பின் இந்த கஷ்டங்களின் பலன் இன்னும் சுவையாக இருக்கும். I would be an hero !"

"Hero? நாளை நீ ஒரு அர்த்தமற்ற போஸ்ட் கார்ட். உனக்கு இது நன்றாகவே தெரியும். உன் பயம், அவசரம் எல்லாமே அதனால் தான். நான் சொல்வது மிகவும் சாதாரண விஷயம் - உன் வலது கையில் உள்ள பஞ்சு மிட்டாய், இல்லை இடது கையில் உள்ள துப்பாக்கி. நீ இரண்டில் ஒன்றை தான் தேர்ந்தெடுக்க முடியும்"

"விரோன்...நேற்று உன் டைரியைப் படித்தேன்."

"என்ன! என் டைரியை என்னைக் கேட்காமல் படித்தாயா? ரே, இது அநாகரிகம் இல்லை? உன்னிடம் இதனை எதிர்பார்க்கவில்லை"

"நடிக்காதே. நான் அதனை படிக்க வேண்டும் என்று தான் நேற்றிரவு என் அறையில் விட்டுச் சென்றாய். உண்மை தானே?"

நான் மௌனமாக இருந்தேன். உண்மைதான்.

"So, நீ ஒரு புரட்சிக்காரன்?"

"ஆம். இந்த நாட்டினை ஒரு புதிய பாதையில் நடத்திச் செல்லப் பிறந்தவன்", என்று சொல்லிக் கொண்டே பாக்கெட்டில் இருந்து பிஸ்டலை எடுத்து சுற்றினேன்.

"இதைத் தான் இத்தனை நேரம் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்தாயா?"

"ஆமாம்"

"ம்ம்ம்.."

"எதற்கிந்த ம்ம்? உனக்கு உடன்பாடில்லை என்று தோன்றுகிறது"

"நான் அப்படி சொல்லவில்லை"

"பின் எப்படி?" கொஞ்சம் கோபமாகவே கேட்டேன்.

"எப்படியும் இல்லை விரோன்! சரி கேள். நீ உன் வாழ்க்கையை பயந்து வாழுகிறாய்"

"பயத்துடன்? நானா?", சிரித்தேன்.

"சரி, பயம் என்பது அதிக பட்ச வார்த்தை. ஆனாலும் பயமும் இருக்கிறது. இப்பொழுதே பார், உன் வலது கையில் பஞ்சு மிட்டாய் அப்படியே இருக்கிறது. என் கையில் இருப்பதை பார், குச்சி பட்டுமே; என்னால் என் பஞ்சு மிட்டாயை முழுவதுமாக ரசிக்க முடிந்தது. நீ பஞ்சு மிட்டாயை விட இடது கையில் உள்ள துப்பாக்கியை இறுகப் பிடித்திருக்கிறாய்."

"புரட்சியைவிட உனக்கு இந்த அற்ப பஞ்சு மிட்டாய் பெரிதாகத் தோன்றுகிறது?"

"விரோன் நான் சொல்வது உனக்கு புரியவில்லை. உனக்கு நான் சொல்வது பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் இதனை நீ கேட்டே ஆக வேண்டும். நீ உன் வாழ்க்கையை அவசரமாக வாழுகிறாய். அனைத்திலும் அவசரம். இன்று, நேற்றிரவு, எப்பொழுதும். நீ ஒரு பெரிய சுமையுடன் அலைகிறாய். "

"சிலவற்றைப் பெற சிலவற்றை இழக்கத் தான் நேரிடுகிறது. வெற்றி பெற்ற பின் இந்த கஷ்டங்களின் பலன் இன்னும் சுவையாக இருக்கும். I would be an hero !"

"Hero? நாளை நீ ஒரு அர்த்தமற்ற போஸ்ட் கார்ட். உனக்கு இது நன்றாகவே தெரியும். உன் பயம், அவசரம் எல்லாமே அதனால் தான். நான் சொல்வது மிகவும் சாதாரண விஷயம் - உன் வலது கையில் உள்ள பஞ்சு மிட்டாய், இல்லை இடது கையில் உள்ள துப்பாக்கி. நீ இரண்டில் ஒன்றை தான் தேர்ந்தெடுக்க முடியும்"

நான் கோபமாக பஞ்சு மிட்டாயை தரையில் எறிந்தேன். நான் இதனைத் தான் விரும்புகிறேன் என்பது போல் பிஸ்டலை என் விரலில் சுற்றிக்கொண்டே அங்கிருந்து வெளியேறினேன். ரேயோனைக் கடைசியாகப் பார்த்த நாள் அது தான்.
"மிச்சமிருப்பது உன் பற்களின் சுவடுகள், கலந்த வேர்வை வாசம், சில கிழிந்த ஆடைகள்"
நான் என் வலது தோள்பட்டையை தடவிப் பார்த்தேன், பற்களின் சுவடுகள் பதிந்த இடமும் என்னுடன் இல்லை. இன்னும் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

என் அறைக் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. நான் கேட்கும் கடைசி ஒலிகள். ஃப்லாஷ் லைட் ஏந்திக் கொண்டு இருவர் வந்தனர்.

ஒருவன் "The honour is yours" என்றான். மற்றொருவன், பொறுமையாக துப்பாக்கியை நெற்றியில் வைத்தான். நான் கண்களை மூடிக் கொண்டேன். வரிசையாக பல பிம்பங்கள் வந்து மறைந்தன - சைக்கிள், என்னைத் தாக்கிய கல், என் முதல் துப்பாக்கி, அம்மா, லார்ஸிக், நண்பன் செர்கன், என் க்ரிக்கெட் மட்டை, ரேயோன், நான் கொன்ற முதல் மனிதன், மறுபடி ரேயோன், என் படம் கொண்ட ஒரு போஸ்ட் கார்ட், என் தொப்பி, கடைசியாய் நான் தூக்கி எறிந்த அந்த பஞ்சு மிட்டாய். என்னை இருள் நிரந்தரமாக சூழ்ந்துக் கொண்டது.

Thursday, August 11, 2005

என் பெயர் சித்ரா

chitra
ஆகஸ்ட் 13
என் பெயர் சித்ரா. இன்று என் பன்னிரெண்டாவது பிறந்த நாள். அண்ணன் இந்த டைரியை வாங்கித் தந்தான். இந்த டைரியில் தினம் நான் என்னைப் பற்றி எழுதப் போகிறேன். அண்ணனை எனக்கு மிகவும் பிடிக்கும். அவன் சென்னையில் டாக்ஸீ ஓட்டுகிறான். இரண்டு மாதத்துக்கு ஒரு முறை என்னை வந்து பார்ப்பான். அவன் டாக்ஸீயில் தான் வருவான். எனக்கு அவன் டாக்ஸீ பிடிக்காது, கருப்பு நிறம்.

ஆகஸ்ட் 14
அண்ணனுக்கும் அப்பாவுக்கும் பெரிய சண்டை. அப்பா நிறைய கெட்ட வார்த்தைகள் பேசுவார். எனக்கு அவரைப் பிடிக்காது. குடித்துவிட்டு அம்மாவை அடிப்பார். இன்றும் அடித்தார். அண்ணன் தடுத்தும் கேட்கவில்லை.அம்மா அழுது கொண்டே இருந்தாள். அண்ணன் மிகவும் கோபமாக டாக்ஸீ எடுத்துக் கொண்டு ஊருக்குக் கிளம்பி விட்டான். அம்மா அவனுக்காக பாயாசம் செய்திருந்தாள். அவன் அதைக் குடிக்காமலே சென்றுவிட்டான். எனக்கு பாயாசம் பிடிக்காது. நான் கூழ் மட்டும் தான் குடிப்பேன்.

ஆகஸ்ட் 15
இன்றைக்கு பள்ளி விடுமுறை. காலையில் "குட்டி இராஜகுமாரி" படித்தேன்; அண்ணா வாங்கித் தந்தது. நான் அதை எட்டு முறை படித்து விட்டேன். அண்ணா தனியாக இருக்கும் போதெல்லாம் என்னை "குட்டி இராஜகுமாரி" என்று அழைப்பான். எனக்கு வெட்கமாக இருக்கும்.

அப்பா சாயங்காலம் சினிமா கொட்டகையில் "வெற்று பிம்பங்கள்" திரைப்படம் பார்ப்பதற்காக அம்மாவை கிளம்பச் சொன்னார். அம்மா, என்னையும் கூட்டிச் செல்லலாம் என்று கெஞ்சி சம்மதிக்க வைத்தாள். அப்பா வழக்கத்திற்கு மாறாக அவ்வளவாக கோபப் படவில்லை. கொட்டகைக்குள் அப்பா அம்மாவின் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டிருந்தார். அம்மாவுக்கு கோபம் வரவில்லை, சிரித்துக்கொண்டே இருந்தாள். படம் நன்றாகவே இல்லை. படம் முழுக்க சண்டை;இரத்தம். ஏதோ குழந்தை பக்கத்தில் அசிங்கம் செய்துவிட்டது. நாற்றம் அடித்தது. நான் வீட்டுக்குப் போகலாம் என்று அழத் துவங்கி விட்டேன். அதிகமாகவே அழுதேன். மண்ணில் புரண்டு பாவாடை எல்லாம் ஒரே அழுக்கு. அம்மா என்னை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வேகமாக கிளம்பினாள். அப்பா வரவில்லை. கிளம்பும் முன் "சனியனை கூட்டி வர வேண்டாம்னு இதுக்குத் தான் சொன்னேன்" என்று கத்தினார். அப்பா என்னை "சனியன்" என்று தான் அழைப்பார்.

ஆகஸ்ட் 16
இன்று பள்ளியில் அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் அறிவித்தனர். சரித்திரம், கணிதம், அறிவியல் மூன்றிலும் நல்ல மதிப்பெண்கள். தமிழிலும் ஆங்கிலத்திலும் குறைவு. அம்மாவுக்கு மிகவும் சந்தோஷம். இரவில் அப்பாவிடம் சாப்பிடும் போது சொன்னாள். அப்பா அவசரமாக "உம்" கொட்டினார்.

ஆகஸ்ட் 17
இன்று காயத்ரியை அடித்து விட்டேன். அவள் என் தோளில் கைப் போட்டாள். எனக்கு அது பிடிக்காது. ஷாரதா டீச்சர், என்னை மிகவும் கோபமாகத் திட்டினார். எனக்குக் கோபம் கோபமாக வந்தது. வீட்டிற்கு வந்த போது அம்மா குளித்து பொட்டெல்லாம் வைத்து அழகாக இருந்தாள். என்னிடம் "உனக்குத் தம்பி பாப்பா வரப் போறான்" என்று சொல்லி புன்னகைத்தாள். நான் என் பையை தூக்கி எறிந்து கொல்லையில் போய் ஓரமாக உட்கார்ந்துக் கொண்டேன். அம்மாவும் இன்று கோபப் பட்டாள். எனக்கு அழுகை வந்தது. விரல் நகத்தையும் சுற்றி இருந்த சதையையும் கடித்தேன். கோபம் வந்தால் இப்படித் தான் செய்வேன். கை எல்லாம் ஒரே இரத்தம். எனக்கு வலிக்கவே இல்லை. அம்மாவிடம் ஓடினேன். அம்மா பயந்துவிட்டாள். பத்தெல்லாம் வைத்து கட்டு போட்டு விட்டாள். அவளும் அழுதாள்.

ஆகஸ்ட் 18
இன்று பள்ளிக்குப் போகவில்லை. பாலம் உடைந்து விட்டதாம். 2கிமீ. சுற்றிக் கொண்டு தான் போக வேண்டும். எனக்கு அந்த பாதை பிடிக்காது.

இன்று நாள் பூராக படம் வரைந்தேன். அம்மாவின் படம் கூட வரைந்தேன். அம்மாவிடம் காட்டிய பொழுது என்னை அணைத்தாள். அம்மாவுக்கு என்னை மிகவும் பிடிக்கும். எனக்கும் அவளைப் பிடிக்கும். ஆனால் சில சமயங்களிம் எனக்குப் பிடிக்காது. அவள் என்னை அணைத்துக் கொள்வாள். எனக்கு கோபம் வந்து அவளைத் தள்ளி விடுவேன். இன்றும் அப்படித் தான் செய்தேன். அம்மா ஒன்றும் சொல்லவில்லை.

ஆகஸ்ட் 19
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரே சண்டை. அப்பா குடித்து விட்டு வந்திருந்தார். அவருடன் வேறு யாரோ வந்திருந்தார். அம்மா ஒரு மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டே இருந்தாள். நான் அம்மாவின் பக்கத்தில் போய் நின்று கொண்டேன். "இந்த சனியன் நமக்கு வேண்டாமடீ" என்று என்னைப் பார்த்துக் கத்தினார். எனக்கு ஒன்றும் புரியவே இல்லை.

ஆகஸ்ட் 20
இன்றும் பள்ளிக்குப் போகவில்லை. பாலம் சரியாக இன்னும் 4 நாட்களாகும். நான் டைரியைப் படித்துக் கொண்டிருதேன். அம்மா என்னைப் பின்னால் இருந்து அணைத்தாள். எனக்குக் கோபம் வந்தது. ஆனால் அம்மா அழுது கொண்டிருந்தாள். எனக்கு பயமாக இருந்தது. "உனக்கு இனிமே இந்த டைரி, ஸ்கூலு எதுவும் கிடையாது சித்ரா. உங்கப்பன் உன் வாழ்க்கையே பாழாக்கப் போறான்.சண்டாளப் பாவி. அந்த பாவிமவன் உன்ன உங்க சித்தப்பன் கிட்ட அனுப்பப் போரானாம். 2000 ரூபாய்க்கு என் உசுரையே வித்துட்டான் . வேற எதாவது ஊருக்கு கூட்டிப் போய் உன்ன பிச்சை எடுக்க விட்டுடுவான்டீ அவன். உங்க அண்ணகிட்ட விட்டுடலாம்னாலும் கேட்க மாட்டேங்கிறான் இந்த மனுஷன். 2000 ரூபாய் அவனா தருவான் -ங்குறான் இந்த கிருக்கன்.உங்க அண்ணன் எங்குப் போய்த் தொலஞ்சானோ. உனக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னு சொன்னா இந்த ஆள் கேட்க மாட்டேங்குறான். நீ வேற அப்பப்போ ஏதாவது கிறுக்குத் தனம் பண்ணிட்டு வந்து நிக்கற. இங்கேந்து தப்பிச்சு போய்டு. எங்கேயாவது ஓடிப் போய்டுடீ." பிறகு ஏதொ கெட்ட வார்த்தை எல்லாம் சொல்லி எங்கப்பாவையும் சித்தப்பாவையும் திட்டினார். நாளை என்னைக் கூட்டிச் சென்று விடுவார்களாம். எனக்கு மிகவும் பயமாக இருந்தது. நான் கொல்லப் புறத்தில் அமர்ந்து அழுதுக் கொண்டே இருந்தேன். அம்மா அழுது கொண்டே வெளியே எங்கோ சென்றாள். எனக்கு அண்ணா ஞாபகம் வந்தது. நாளை முதல் நான் பிச்சை எடுக்கப் போகிறேன், அண்ணா.

இந்த டைரியை நான் கொல்லைப் புறத்தில் புதைக்கப் போகிறேன். இதில் கடைசிப் பக்கத்தில் என் அண்ணாவின் விலாசம் இருக்கிறது. யாராவது இதைப் பார்த்தாள் அவனிடம் ஒப்படைத்து விடுங்கள். நான் "குட்டி இராஜகுமாரி" படித்துவிட்டுத் தூங்கப் போகிறேன்.

ஆகஸ்ட் 21
அம்மா விஷத்தைக் குடித்துவிட்டாள். ஒரே அழுகைச் சத்தம். நானும் அழுதேன். அப்பா - "ரெண்டு உசுருடீ, இப்படி பழி வாங்கிட்டியே!" என்று அழுது கொண்டே அம்மாவின் நெஞ்சில் உதைத்தார். அம்மாவுக்கு வலித்திருக்காது. அப்பா என் தலையை சுவற்றில் மோதினார். எனக்கும் வலிக்கவில்லை. சித்தப்பாவும் அங்கிருந்தார். நான் கொல்லையில ஒளிந்து கொண்டேன். ஒரு மணி நேரம் கழித்து கார் சத்தம் கேட்டது. பிறகு அங்கேயே தூங்கிவிட்டேன்.

சாயங்காலம் அண்ணன் தான் என்னைத் தட்டி எழுப்பினான். அண்ணன் கண்ணெல்லாம் சிவந்திருந்தது. நான் அவனைப் பார்த்தவுடன் அழத் துவங்கிவிட்டேன். அவன் என்னை அவனுடன் கூட்டிச் செல்வதாகச் சொன்னான். எனக்கு ஒரே சந்தோஷம். அவனுக்கு டைரியைப் புதைத்த இடத்தை காண்பித்தேன். அவன் தோண்டி எடுத்தான்; டைரி முழுக்க மண். நான் எழுதியதை எல்லாம் அவனுக்குக் காட்டினேன். அவனுக்கு அப்பா மீது பயங்கரக் கோபம். அப்பாவை கண்ணத்தில் அறைந்தான். ரூபாய் நோட்டெல்லாம் அவர் முகத்தில் எரிந்தான். அப்பா அவற்றை எடுத்துக் கொள்ளவில்லை. அண்ணா என்னை அவன் டாக்ஸீயில் சென்னைக்குக் கூட்டி வந்துவிட்டான். எனக்கு சோகமாக இருக்கிறது. அண்ணன் தங்கி இருக்கும் அறை எங்கள் வீட்டை விடச் சிறியது.

ஆகஸ்ட் 22
அண்ணா என்னை டாக்டரிடம் கூட்டிச் சென்றான். எனக்கு காய்ச்சல் எதுவும் இல்லை என்றேன். அவன் கேட்கவே இல்லை. எனக்கு கோபம் வந்தது, அம்மா ஞாபகம் வந்தது.
எனக்கு டாக்டரை மிகவும் பிடித்திருந்தது. என்னைப் படமெல்லாம் வரையச் சொன்னார். நான் அண்ணாவை மொட்டையுடன் வரைந்தேன். அவர் சிரித்தார். நானும் சிரித்தேன். அப்பாவும் அண்ணனும் நேற்று மொட்டை அடித்திருந்தார்கள். திரும்பி போகும் வழியில் என்னை நாளை பள்ளியில் சேர்க்கப் போவதாகச் சொன்னான். நான் சந்தோஷத்தில் கத்தினேன். அண்ணன் சத்தமாக சிரித்தான்.

ஆகஸ்ட் 25
என் பள்ளியின் பெயர் "Leo Karner Institute for Children with Special Needs". இந்த இடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என்னைத் தவிர இன்னும் ஒரே ஒரு பெண் தான்- ஜோசஃபீன். ஜோசஃபீனுக்கு இறுக அணைத்தால் பிடிக்கும். சந்திரா டீச்சர் அவள் அழும் போதெல்லாம் இறுக அணைத்துக் கொள்வார். நான் ஜோசஃபீன் அழுவது போல் படம் வரைந்தேன். அவளுக்கு கோபம் வந்து விட்டது. இங்கு நான் நிறைய படங்கள் வரைகிறேன். நான் நன்றாக வரைவதாக சந்திரா டீச்சர் சொல்கிறார். அண்ணனும் நான் பெரிய ஓவியனாக வருவேன் என்று சொல்கிறான். நான் வரைந்த படத்தை வரவேற்பரையில் மாட்டி உள்ளனர் - என் அம்மா எனக்கு ஊட்டி விடும் படம். படத்தின் ஓரத்தில் என் கையெழுத்து கூட இருக்கிறது. நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.

-சஞ்சீத்

Related Article By Srikanth Meenakshi- http://kurangu.blogspot.com/2005/08/autism-3.html

Wednesday, July 13, 2005

பேராசிரியர் நிறையின் வாழ்வில் சில உறைந்த கணங்கள்


நாற்பத்தி இரண்டாம் எண் கொண்ட அறை மருத்துவமனையில் மிகப் பிரபலம். அங்கு தான் நிறைக்கொண்டாருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.நான்கு வருடம் முன்பு வரை அவர் "நிறைக்கொண்டான்" என்றே அழைக்கப்பட்டு வந்தார்-இயற்பியல் துறையில் நோபல் பரிசு வாங்கும் வரை. நோபல் பரிசுடன் சில பட்டங்களும், சில அரசாங்க கௌரவிப்புகளும் கிடைத்தன. கூடவே அவர் பெயரின் கடைசி "ன்" "ர்" ஆக மாறியது.

நிறைக்கொண்டார் ரூபிக்ஸ் க்யூப் ஒன்றை கையில் வைத்து, கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். முப்பது வயதுள்ள வினய் அறைக்குள் நுழைந்தான்.

"Oh my God! இது உங்களுக்கு அலுக்கவே அலுக்காதா?" என்று சொல்லிக்கொண்டே க்யூபை அவர் கையில் இருந்து வாங்கினான். தரையில் விழுந்திருந்த சையின்ஸ் டுடே பத்திரிக்கையை எடுக்க குனிந்தான்.

"வினய், There is always another way"

வினய் எழுந்து தலையினை அசைத்துக் கொண்டே சிரித்தான். பத்திரிக்கையை பக்கத்திலிருந்த மேசை மீது வைத்தான்.

"அப்பா, இன்னைக்கு உங்களைப் பார்க்க யாரோ மந்திரி வராராம். அதெல்லாம் முடியாதுன்னு சொன்னேன். கேட்க மாட்டேங்குறாங்க. ப்ரெசுக்கு சொல்லியாச்சு, கான்செல் செய்ய முடியாதுன்னு வாதம் பண்றாங்க. I am fed up with these guys. ஆனா உங்கள தொந்தரவு செய்யக் கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டேன். அவங்களுக்குத் தேவை உங்களோட சேர்ந்து ஒரு ·போட்டோ! இதுல அந்த மந்திரி எனக்கு ·போன் செய்து பேசினார். அவர் நம்ம கம்யூனிட்டி ப்ரெசிடண்டாம். என்ன கம்யூனிட்டின்னு கூட எனக்குத் தெரில. தெரிஞ்சுக்கவே விருப்பம் இல்ல."

வினய் க்யூபை இடது கையினால் தூக்கிப் போட்டுப் பிடித்துக் கொண்டிருந்தான். முப்பத்தி நான்கு முறை க்யூப் காற்றில் பயனித்து விட்டது. திடீரென்று, கை மாற்றிக் கொள்ளலாம் என்று வேகமாக வலது கைப் பக்கம் தூக்கி எறிந்தான்.

"வினய், எனக்கு அவர தெரியும். அவர் அப்பாதான் என்ன படிக்க வைத்தார். நல்ல மனிதர். நான் இந்த கம்யூனிட்டின்னு யாருக்கும் தெரியாது. பிரச்சனை என் பெயர் தான். இவங்க மட்டுமே வைக்கிற பெயர். There was a legend by that name. சுவாரசியமான விஷயம் பாரேன். அவர் போராடினது "அனைவரும் சமம், எல்லார்க்கும் எல்லாம்" என்ற கொள்கைக்காக! ஆனா இன்னும் அந்த கம்யூனிட்டி பெயர்ல ஒரு கட்சி. இப்போ அந்த மந்திரியோட அப்பா எனக்கு உதவி செய்த பத்திரிக்கைள வெளியிட்டு அவர் பெயர் வாங்கிடுவார். I dont mind. எனக்கு விளம்பரம் பிடிக்கும். சின்ன வயசுல உங்க சித்தப்பா அழகா இருக்கார்னு எல்லாரும் அவன கொஞ்சுவாங்க. அப்ப நான் கை கால்ல ஏதாவது அடி பட்டுட்டு வந்து நிப்பேன். என்னை எல்லாரும் கவனிக்கனும்" என்று சொல்லி கண் அடித்தார்.

"அப்பா! You are an eccentric b..". வினய் நிறுத்திக் கொண்டான்.

"ஏண்டா, இப்போ என்ன பார்க்க இத்தனை விசிட்டர்ஸ்? எனக்கு சாவு நெறுங்கிடுச்சா?"

இடது கையிலிருந்த எறிந்த க்யூப் இப்பொழுது வலது கையில் வந்து விழுந்தது. முப்பத்தி ஐந்து. அவருக்கு உலகம் மிக மெதுவாக இயங்குவது போல் தோன்றியது.

"அப்பா , நீங்க கவலைப் படாதீங்க. நான் பார்த்ததுக்கறேன்", என்று சொல்லிக் கொண்டே க்யூப்பை மெத்தை மேல் வைத்து அறையை விட்டு புறப்பட்டான்.

"நர்ஸ், நான்கு மணிக்கு கார்டூன் நெட்வர்க்கில் பேட் மேன் இருக்கிறது. மறந்துடாதீங்க. அப்பாவுக்கு கோபம் வரும்."

பாரதி அவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக கவனித்து வந்த செவிலி; பொறுமையே உருவான மிக அழகிய பெண். மருத்துவமனையில் பேசப்படும் வம்புமொழிகளில் அதிகமாக இடம் பெறுவது இவள் தான். சமீபத்தில் ஒரு வாரவிடுமுறை எடுத்திருந்தாள்; ஒரு ஓவியனை மணம் செய்து கொண்டதாக இரண்டு நாட்கள் முன்பு உதவியாளர்கள் இருவர் பேசிக்கொண்டிருந்தனர். ஏதோ காரணத்தினால், இந்த செய்தி நிறைக்கொண்டாருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. மூன்று நாட்களாக அவள் ஊசி போடும் பொழுதெல்லாம் வலி வேறு. இன்று அவளைத் திட்டியே ஆக வேண்டும் என்று தீர்மானமாக இருந்தார். திடீரென்று அவர் மனதில் ஒரு விபரீத எண்ணம் தோன்றியது. பாரதியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பதிலுக்கு அதே எரிச்சலூட்டும் புன்னகை. சிரின்ஜினில் மருந்தெடுத்துக் கொண்டிருந்தாள். பாட்டில் கை நழுவியது.

நிறைக்கொண்டார் சட்டென்று எழுந்து அவள் அருகில் சென்றார். அவளை அருகில் இழுத்தார். பாரதி அவர் பிடியில் இருந்து விலக முயற்சித்தாள். அவருக்கு கோபம் தலைக்கேறியது. வலது கையினால் ஓங்கி அறைந்தார். அவள் நகர்ந்தாள். அவரது கட்டை விரல் நகம் அவள் நெற்றியின் வலது புறத்தில் பட்டது. சிறிய கீறல். லேசாக இரத்ததின் சுவடு. மூர்க்கமாக இழுத்து அவள் உதடுகளில் முத்தமிட்டார். பின், அவளை கோபமாகத் தள்ளிவிட்டு படுக்கைக்கு வந்தார்.

கை நழுவிய மருந்து பாட்டில் இப்பொழுது தரையில் பட்டு சிதறியது. மஞ்சள் துளிகள் அவள் வெள்ளை ஆடை முழுவதும் தெளித்தன. அவளை இன்னும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவள் முகத்தில் இன்னும் அந்த பொறுமை. அவள் ஆடையை சரி செய்து கொண்டிருந்தாள். ஒரு சிறிய முடிக் கற்றை நெற்றியின் வலது புறத்தை மறைத்திருந்தது. அவளது நிதானம் அவரை நிலைக்குலையச் செய்தது. அவருக்கு தன் மீது ஒரு அருவெறுப்பு எழுந்தது. பாரதி, வேறொரு பாட்டிலில் இருந்து மருந்தெடுத்து வந்தாள். ஊசி குத்திய போது அவருக்கு அதிகமாக வலித்தது.

கிளம்பும் பொழுது டி.வியை ஆன் செய்து, கார்டூன் நெட்வர்க் வைத்து விட்டுச் சென்றாள்.

அரை மணி நேரம் பேட்மேன் பார்ப்பதில் கழிந்தது. அறுபது வயதாகிய பேராசிரியர் இராமகிருஷ்ணன் அறைக்குள் நுழைந்தார். தலை முடியில் ஒரு கறுப்புக் கோடு மட்டும் இருந்தது.

"நிறை, How are you?"

ஒரு மெல்லிய புன்னகையுடன் தலையை மேலும் கீழும் அசைத்தார்.

"நேற்று ராமானுஜம் ஆடிட்டோரியமில் பேராசிரியர் ஹார்ட்டன் பேசினார். அதுக்குப் பிறகு ஒரு மணி நேர கலந்துரையாடல். Was very interesting. உனக்கு ஒரு கடிதம் கொடுக்கச் சொன்னார்," என்று சொல்லிவிட்டு தன் பையில் குனிந்து தேடினார்.

"ராம்கி. Do you know, I kissed that girl today. நெஜமா ராம்கி"

இராமகிருஷ்ணன் நிமிர்ந்தார். கடிதம் கிடைத்து விட்டது. "இதோ அந்த கடிதம்".

இராமகிருஷ்ணன் வேண்டுமென்றே தான் சொல்வதை அலட்சியம் படுத்துகிறார் என்று அவருக்கு கோபம் வந்தது.

"Interesting discussion நிறை. Waydord's conjecture-ஐ ஏன் சரி என்றோ தவறென்றோ நிரூபிக்க முடியாதுன்னு ஹார்ட்டன் விவரித்தார். மாரிக்கும் அவருக்கும் பெரிய விவாதம். சுவாரசியமா இருந்தது. We missed you நிறை. நிறை ஏன் என்னை அப்படி பாக்குற? உனக்கு ஏன் இப்படி வேர்க்கிறது? Are you all right? இரு ஏசியை வேகமாக்குகிறேன்"

இராமகிருஷ்ணன் ஏசி டாஸ்போர்ட் பக்கம் நடந்து சென்றார்.

"ராம்கி, Waydord's conjecture தப்புன்னு ரொம்ப சுலபமா நிரூபிச்சடலாம். ச்ச, எனக்கு இத்தனை நாள் ஏன் தோனாம போச்சு. So stupid of me. I am excited! ராம்கி, ஹார்ட்டன வர சொல்றியா? இதை வெளியிட்டே ஆகனும்".

இராமகிருஷ்ணன் ஏசியின் வேகத்தை கூட்டிவிட்டுத் திரும்பினார்.

"கடவுளே! நிறை! நர்ஸ்.நிறை நிக்கிறான்.. நடக்கறான்.. He is trying to say something....நர்ஸ்!"

"What the hell, ராம்கி! ஏன் நான் சொல்றத கேட்க மாட்டேங்கற?" என்று கத்தவேண்டும் என்று தோன்றியது. சந்தோஷமும் பரபரப்பும் கோபமும் சேர்ந்து அவர் வாய் அடைத்தது போல் இருந்தது. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

"நிறை, உட்கார். You are not stable. அங்க போகாத. பால்கனி தடுப்பு சின்னது. நிறை. stop நிறை..நர்ஸ்! டாக்டர்..வினய்..நிறை..stop..hold the rail! நிறை!"

********

அடுத்த நாள், "காகித மலர்கள்" நாளிதழின் முதல் பக்கத்தில் ஒரு சிறிய கட்டத்தில் நிறைக்கொண்டாரைப் பற்றிய செய்தி வெளியாகியிருந்தது-
நோபல் லாரெட் நிறைக்கொண்டார் காலமானார். பிரபல பேராசிரியரும் நோபல் லாரெட்டுமான நிறைக்கொண்டார் நேற்று அவர் சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவமனையின், மூன்றாவது மாடியில் உள்ள அவரது அறையில் இருந்து விழுந்து இறந்தார். அவருக்கு வயது 53. விபத்து நடந்த பொழுது அவருடன் பேராசிரியர் இராமகிருஷ்ணனும் அறையில் இருந்தார். இரண்டு வருடங்கள் முன்பு நடந்த விபத்தொன்றில் முதுகெலும்பு முறிந்து இரண்டு வருடங்களாக நகர இயலாமலும், பேச இயலாமலும் இருந்தார். அவரது கடைசி தருணங்களில் எழுந்து நின்று தடுமாறி நடந்ததாகவும், ஏதோ சொல்ல கடுமையாக முயற்சித்ததாகவும் இராமகிருஷ்ணன் அவரை விசாரித்த காவலாளர்களிடம் தெரிவித்தார்........................................................

Tuesday, June 28, 2005

ஒரு தமிழ் திரைப்பட இயக்குனரின் திரையுலக வாழ்க்கை

Iyakaunar-kumaran
குமரன்
தன்னை ஒரு படைப்பாளியாக மட்டுமே பார்த்து வந்தான். கும்பகோணத்தருகில், சிறு கிராமம் ஒன்றில் அகல்கள் மட்டுமே படைப்பதை தொழிலாகக் கொண்டாலும், எதிர்காலத்தில் அவன் கரங்களும் சிந்தனைகளும் உலகம் போற்றும் மாபெறும் படைப்புகளைத் தோற்றுவிக்கும் என்பதில் அசுர நம்பிக்கை வைத்திருந்தான். ஆனால் அவை என்னவென்றும், எத்துறையில் என்றும் அவனுக்குத் தெரியவும் இல்லை, தெரிந்து கொள்ளவும் முயற்சி எடுக்கவில்லை. "உலகம் என் படைப்புகளுக்காக காத்திருக்கட்டும்" என்ற செருக்கான சொற்களை அவன் அடிக்கடி அவனுக்குள் சொல்லிக் கொள்வான். சிறிது காலமாக சினிமாவில் அவனுக்கு ஒரு ஈடுபாடு வந்திருந்தது. சாப்ளின், குரோஸவா, பெர்கமன், ரே போன்றோர்கள் பற்றிய புத்தகங்களைப் படித்தான். இவர்களது திரைப்படங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு கற்பனை திரை உலகுக்குள் வாழ்ந்து வந்தான்.

குமரனின் அகல்கள் கும்பகோணத்தில் மிகப் பிரபலம். கோயில்களில் காணப் பட்ட அனைத்து அகல்களும் குமரன் உருவாக்கியவை. குமரன் தன் அகல்களை செய்ய எந்த அச்சையையும் பயன்படுத்த மாட்டான்;ஆனால் ஒன்றிற்கும் இன்னொன்றிற்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது இயலாத காரியம். தன் அகல்களுக்கு உயிர் இருப்பதாகவே கருதினான், அதுவும் அவன் தந்தது. அவன் வாழ்க்கையின் சோகமான தருணங்களிலும் மகிழ்ச்சியான தருணங்களிலும் அவன் செய்த அகல்களை விரல்களால் வருடுவான்;அது அவனுக்கு இனம் புரியாத உணர்வை அளித்தது - ஒருவித நிம்மதி. அவன் ஒரு நாத்திகன் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது. குமரனுக்கு இது வேடிக்கையாக இருந்தது, ஏனெனில் அவன் நாத்திகனா ஆத்திகனா என்று அவன் ஒரு போதும் சிந்தித்ததில்லை. பூஜைகளுக்கும், விழாக்களுக்கும் பிறகு அவன் அகல்கள் தூக்கி எறியப்படும். அதை பார்க்கும் பொழுதெல்லாம் அவன் மனம் கனமாகிவிடும். அந்த உணர்வு அவனுக்கு பிடித்ததில்லை; கோயில்களுக்குப் போவதை நிறுத்திக் கொண்டான்.

குமரன் தன் இருபத்தி நான்காவது பிறந்த நாளில், சென்னைக்குக் கிளம்பினான். "திரை உலகமே, முக்கிய திருப்புமுனையை நீ நெருங்குகிறாய்" என்று அவனுக்கு சொல்லிக் கொள்ளும் "செருக்கான சொற்கள்" புது வடிவம் பெற்றன. முதல் வருடம் அவன் பல வித்யாசமான வேலைகள் செய்தான், சில சினிமாவுக்கு சம்பந்தமானவை, சில சம்பந்தம் இல்லாதவை - லைட் பாய், ஸ்டுடியோ ஒன்றின் காண்டீனில் சப்ளையர், வெளி வராத திரைப்படம் ஒன்றின் துணை இயக்குனர், ஒரு பெரிய இயக்குனர் நடத்தி வந்த விடுதி ஒன்றின் ரூம் பாய், ஒரு திரை இசைக்குழுவில் தவில் கலைஞன், துணை நடிகன். அந்த நாட்களின் எல்லா இரவுகளையும் சென்னை திரையரங்குகளில் கழித்தான். ஒரு வருடத்திற்கு பிறகு அவனுக்கு இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. எண்பது வயது தயாரிப்பாளர் அவன் கதையை படமாக்க முன் வந்தார், ஒரு நிபந்தனையுடன் - இயக்குனராக அவர் பெயரையும் சேர்க்க வேண்டும். குமரன் முதலில் தயங்கினான். பின்பு, திரைப்படத்தின் இயக்கத்தில் தலையிடாமல் இருந்தால் நிபந்தனைக்கு ஒப்புக் கொள்வதாகக் கூறினான். அவன் சிந்தனைகள் படமாக்கப் படுவதை விட வேறொன்றும் அவனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. படப்பிடிப்பு துவங்கியது. ஒவ்வொறு காட்சியையும் அணு அணுவாக ரசித்து எடுத்தான். படத்தின் பெயர் "ஒரு நாள்". உலகம் தோன்றிய முதல் நாளில் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் ஏற்பட்ட உணர்வுகளையும், நிகழ்வுகளையும், காதலையும், ஆச்சரியங்களையும் உலகம் அழிவதற்கு முந்தைய நாள் இரு காதலர்கள் இடையே ஏற்படும் அனுபவங்களுடன் ஒப்பிடும் கதை. இதுவரை எவனுக்கும் தோன்றிடாத சிந்தனை என்று இறுமாப்பு கொண்டிருந்தான்.

"ஒரு நாள்" வெளிவந்தது. பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது. விரசமான திரைப்படம் என்று விமர்சனம் செய்யப் பட்டது. சமுதாயத்தை சீர்குலைக்கும் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று நீதி மன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன். பெருந் திரளாகப் பெண்கள் திரண்டு குமரன் வக்கிர புத்திக்காரன் என முத்திரைக்குத்தினர். தயாரிப்பாளர் தன்னை இயக்குனர் பதவியில் இருந்து விலக்கிக் கொண்டார். அந்த நாட்களில் கூட்டம் அரங்குகளில் அலைமோதின. சர்ச்சைக்குக் காரணம் காதலர்கள் இணையும் கடைசிக் காட்சி. வார்த்தைகள் இல்லாமல் வெறும் உணர்ச்சிகள் மூலம் காம உருவில், உள்ளுணர்வுகளையும், உறவின் ஆழத்தையும், விரக்தியையும் வெளிப்படுத்தும் காட்சியை, அவன் அவனது படைப்பாற்றலின் சிறந்த வெளிப்பாடாக கருதினான். அந்த காட்சியின் பின்ணணி இசையாக வந்த "அதரங்கள் இணைய ஆன்மா இணைந்தது..." என்ற பாடலையும் அவனே எழுதி இருந்தான். தயாரிப்பாளரின் வற்புறுத்தலால் அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் செய்யப் பட்டன். குமரனுக்கு அதில் உடன்பாடில்லை. "ஒரு நாள்" இருபது நாட்களைக் காணவில்லை. தவிர்க்க வேண்டிய படம் என்றும், இரண்டு மணி நேரம் அமர்ந்து பார்க்க முடியாத திரைப்படம் என்றும் பத்திரிக்கைகளிலும், இணையத் தளங்களிலும் வெளியாயின. அதில் நடித்த கதாநாயகிக்கு அதுவே கடைசிப் படமாக அமைந்தது. கதாநாயகன் அதற்குப் பின் பல கோடிகள் சம்பளமாக வாங்கும் அளவிற்கு வளர்ந்தார். "ஒரு நாள்" சில உலகத் திரைப்பட விழாக்களில் இடம் பெற்றது. குமரன் அவை எதிலும் பங்கு கொள்ளவில்லை. "மனித உணர்வுகளை குமரனைவிட எவரும் இதுவரை அழகாக படமாக்கவில்லை" என்று ஒரு ஃபிரஞ்சு நாளிதழில் பிரசுரமாகியது. குமரனுக்கு அதைப் படிக்கும் வாய்ப்பு அமையவில்லை.

குமரன் அடுத்த படம் எடுப்பதற்கு தயாராக இருந்தான். "இரண்டு மணி நேரம் அமர்ந்து பார்க்க முடியாத திரைப்படம்" என்று சொன்னவர்களுக்கு சவுக்கடியாக இருக்க வேண்டும் என்று ஒரு கதையை தன் மனதில் உருவாக்கினான். கடத்தப் பட்ட காதலியை மீட்கும் ஒரு காதலனின் கதை - வெறும் சம்பவங்களைக் கொண்டு இரண்டரை மணிநேரம் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்தான். ஒரு புது தயாரிப்பாளர் முன் வந்தார். "தேடல்" துவங்கியது. அவன் கையாண்ட திரைக்கதை முறை திரை உலகிற்கு புதிது என்று அவன் குழுவினர் அவனைப் பாராட்டினர். ஆறு மாதங்கள் அயராது உழைத்தான். ஒரு பாடல் காட்சிக்கு அகல் விளக்குகளிடையே ஒரு நடனம் அமைத்திருந்தான். அகல்கள் ஒவ்வொன்றையும் அவனே செய்தான். அப்பொழுதும் அகல்களை வருடுவதில் ஒருவித நிம்மதி கிடைத்தது. "தேடல்" வெளிவந்தது. காதலன் காதலியை ஒரு காட்சியிலும் தீண்டவில்லை; காதலியும் அப்படியே. தன்னை வக்கிர புத்திக்காரன் என்று சொன்னவர்களுக்கு அவன் தரும் தண்டனையாகக் கருதினான். தேடல் ஓரளவிற்கு ஓடியது. எவரும் வீட்டையோ, சேர்த்து வைத்த சொத்துக்களையோ விற்கும் அளவிற்கு வரவில்லை. விமர்சனங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. சராசரி திரைப்படம் என்றே அதை மதிப்பிட்டிருந்தனர். ஒரு ஆங்கில பத்திரிக்கையில் மட்டும் தேடலின் திரைக்கதை அமைப்பு "The little girl from WhitesVille" என்ற படத்தின் நகல் என்று எழுதி இருந்தனர். அதன் பின் வந்த விமர்சனங்கள் அனைத்துமே அதனைக் குறிப்பிட்டு சராசரிக்கும் கீழ் என்று மதிப்பிட்டனர். "The little girl from WhitesVille" திரைப்படத்தை சிலர் தேடிப் பார்க்கத் துவங்கினர். தேடல் திரையிடப் பட்ட திரை அரங்குகளில் கூட்டம் குறைந்து கொண்டே இருந்தது. குமரனும் The little girl from WhitesVille பார்த்தான். ஆச்சர்யத்துடன் கோபமும் எழுந்தது. அந்த திரைக்கதை அமைப்பின் சொந்தக்காரன் அவனில்லை என்ற எண்ணம் அவனை மிகவும் வாட்டியது. The little girl from WhitesVille படத்தின் பிரமாண்டமும் அவனை பிரமிக்க வைத்தது.

அவன் மனதில் சில நாட்களுக்கு ஒலித்துக் கொண்டிருந்த சொல் - பிரம்மாண்டம். இம்முறை தயாரிப்பாளரைத் தேடுவது எளிதாகவே இருந்தது. சிலருக்கு தேடல் பிடித்திருந்தது. தமிழ் திரையுலக வரலாற்றிலேயே அதிக செலவில் எடுக்கப்படும் படம் என்று பத்திரிக்கைகளில் செய்திகள் வரத் துவங்கின. படத்திற்கு பெயர் வைத்திருந்தாலும் அதனை வெளியிடவில்லை. குமரனின் பிரமாண்டமான படம் என்று அனைவரும் குறிப்பிடுவது அவனுக்கு ஒரு போதையை ஏற்படுத்தியது. ஒன்றரை வருட உழைப்பின் பின் "அந்த வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பு" வெளிவந்தது. இரு நாட்டவருக்கிடையே நடக்கும் போரினை பிரம்மாண்டமாக எடுத்திருந்தான். குமரன் விமர்சனங்களுக்காக காத்திருந்தான். தாமதமாகவே வெளிவந்தது. யதார்த்த மீறல் என்றும் எந்தெந்த காட்சிகள் எப்படத்தில் இருந்து நகல் எடுக்கப் பட்டன என்று ஒரு பட்டியலே வெளியிட்டிருந்தனர். குமரனுக்கு புதிதாக இருந்தது. மரத்தினைப் பூமியில் இருந்து பிளந்து அடிக்கும் கதாநாயகனைக் கொண்ட படத்தில் எதற்காக யதார்த்ததை எதிர்ப்பார்க்கிறார்கள் என்று அவனுக்குப் புரியவில்லை. அது பாரதப் போரின் நவீன ஆக்கம் என்று ஒருவர் புரிந்து கொணடாலும் தனக்கு வெற்றி என்று காத்திருந்தான். அதே சமயம் அவனது சிந்தனைகளை வேறொருவர் அவனுக்கு முன்பே யோசித்துவிட்டார் என்பது அவனது படைப்பாற்றலுக்கு இழுக்காக கருதினான். நூறு நாட்கள் ஓடினாலும் எதிர்ப்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அந்த வருடத்தின் சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் அப்படம் இடம் பெறவில்லை.

ஆறு மாதங்களில், யாரும் எதிர்ப்பாராத நேரத்தில் குமரனின் அடுத்த திரைப்படம் வெளிவந்தது -"தேசிய நெடுஞ்சாலை - 47". குமரனே அதைத் தயாரித்தும் இருந்தான்.ஒரு நெடுஞ்சாலை ஓரத்தில் ஆட்டிசமினால் பாதிக்கப்பட்டோருக்கான பள்ளி ஒன்றிருக்கிறது.அந்த நெடுஞ்சாலையில் வெவ்வேறு நேரங்களில் நடைபெறும் மூன்று விபத்துகளை ஒரு சிறுமி காண்கிறாள். அந்த விபத்துகளில் சிக்கி இறந்தவர்கள் யார் என்றும், அவர்களது வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை அறிய வேண்டும் என்று ஒரு ஆர்வம் அந்தச் சிறுமிக்கு எழ, அதற்கான விடைகளைத் தேடிச் செல்கிறாள். அந்த மூன்றுமே ஒன்றிற்கொன்று தொடர்புடைய கொலைகள் என்பதை அறிந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடிக்கிறாள் என்பது தான் கதை. பத்திரிக்கைகளாலும் மக்களாலும் பெரிதும் ஆதரிக்கப் பட்டது. புதிய கதை, புதிய அணுகுமுறை என்று போற்றப்பட்டது. குமரன் தன் படைப்பாற்றலுக்கு கிடைத்த பெரிய வெற்றியாக கருதியிருந்த நேரத்தில், அவன் சற்றும் எதிர்ப்பாராத விதத்தில் அவன் மீது ஒரு வழக்கு தொடரப்பட்டது.

"தேசிய நெடுஞ்சாலை - 47" திரைப்படத்தில் சித்தரிக்கப் பட்ட மனநிலை பாதிக்கப் பட்டோருக்கான பள்ளியில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவராகக் காட்டி இருக்கின்றனர். இது அந்த ஜாதியை சேர்ந்தோரை இழிவு படுத்துவது போல் உள்ளது. மேலும், இதை அறிவியல் ரீதியாக பார்த்தால், அந்த ஜாதியில் பிறக்கும் குழந்தைகள் இது போல் மன நிலை பாதிக்கப் படுவதற்கான சாத்தியக் கூறு அதிகம் என்பது போல் மறைமுகமாக சொல்லி உள்ளனர்.இது நாளடைவில் அவர்களது சமூகத்தையே சுவடுகளின்றி அழித்துவிடுவதற்கான பயங்கர முயற்சி".

திரைப்படத்திற்கு தடை விதிக்கப் பட்டது. குமரன் முதல் முறையாக வலி என்பதை உணர்ந்தான். படைப்பாளி என்ற அவன் கர்வத்தை உடைத்தது போல் இருந்தது. பித்துப் பிடித்தவன் போல் திரிந்தான். அந்த ஆட்டிசப் பள்ளி சித்தரிக்கப்பட்டதல்ல, உண்மையென்று சொல்லக் கூட அவன் சுயநினைவில் இல்லை. கடன் கொடுத்தவர்கள் மிரட்டினார்கள், அந்த ஜாதிக்காரர்கள் மிரட்டினார்கள்.

என்ன செய்வது என்று திகைத்துக் கொண்டிருந்த பொழுது, அகல்கள் அவன் நினைவுக்கு வந்தன. அன்று மாலையே அவன் கிராமத்திற்குக் கிளம்பினான்.அவன் படைக்கும் அகல்கள் எதற்காகப் படைக்கப் படுகின்றனவோ அதற்காக மட்டும் பார்க்கப் படும், வருணிக்கப் படும், ரசிக்கப் படும் என்ற எண்ணம் ஒரு பெரிய ஆறுதலை அளித்தது. அவனது வீட்டை அடைந்தவுடனே அவன் படைக்கும் தொழிலை துவங்கிவிட்டான். நூற்றுக்கணக்கில் அகல்கள் செய்து அடுக்கினான். விரல்கள் சோர்வடைந்த பொழுது மெதுவாக அகல்களை வருடினான், இம்முறை கிடைத்த நிம்மதிக்கு அளவே இல்லை."நான் படைப்பாளி" என்று ஒருமுறை சொல்லிக் கொண்டான்.

Powered by Blogger